×

உடல்நலக் குறைவு காரணமாக பிரபல ஓவியர் மாருதி காலமானார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக பிரபல ஓவியர் மாருதி நேற்று காலமானார். புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல ஓவியர் மாருதி(86) 1938ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ரங்கநாதன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பியூசி படிப்பில் சேர்ந்த மாருதி, ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சையை சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

1969ம் ஆண்டு திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் சென்னை வந்த மாருதி, திரைப்படங்களுக்குப் பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்து பணியாற்றினார். திரைப்படங்களுக்கு பேனர் வரையும் வேலையையும் நாளிதழ்களில் அட்டைப்படங்கள் வரையும் வேலையையும் ஒரேநேரத்தில் செய்தார். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். மேலும் குங்குமம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார்.

கதை, கவிதைகளுக்கு ஏற்ப ஓவியங்கள் வரைவது இவருடைய சிறப்பம்சமாகும். இவருடைய ஒவியங்களின் அழகும், நளினமும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில் இவர் கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தனது மகள் சுபாஷினி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வந்தார், இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

* முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி – தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post உடல்நலக் குறைவு காரணமாக பிரபல ஓவியர் மாருதி காலமானார் appeared first on Dinakaran.

Tags : Maruti ,Chennai ,Pudukottai ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!